வெள்ளி, 4 ஜூன், 2010

நம்மாழ்வார் எனும் நண்பர்!

எங்கள் ஊரில் டவுசர் போட்ட பையன்கள் கூட யாரவது ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருந்த காலக்கட்டம் அது. எனக்கு எந்த நடிகர் மன்றத்திலும் சேர வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று நடிகரின் புதிய படம் வெளி வந்தவுடன் அதிக பணம் கொடுத்து, டிக்கெட் வாங்கும் நிலையில் சூழ்நிலை இல்லை. அடுத்து, தங்களுடன் ரசிகர் மன்றத்தில் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு எனிடம் மேதாவிலாசம் கிடையாது என்று கருதினார்கள். இதனால், சினிமா, மன்றம்... என்று எங்கும் செல்லாமல் பெருபாலன நேரத்தில் நூலகத்தில் செலவழிக்க முடிந்தது. நரசிங்கபுரத்தில் இருந்த அந்த சிறிய கிளை நூலகத்தில் காலையில் தொடங்கி மூடும் மாலை கதவைடைக்கும் வரைக் கூட வாசித்துக் கொண்டுயிருந்திருக்கிறேன். இப்படி வாசிப்பதும் எனக்கு மன நிறைவு கொடுக்கவில்லை. ஆகையால் ஆத்தூரில் பேருந்து நிலையத்தில் புத்தக்கடை நடத்தி வந்த எங்கள் குடும்ப நண்பர் செராப்கான் அண்ணன் கடைக்கு செல்வேன். காலை நேரத்தில் வியாபாரம் சுறு,சுறுப்பாக இருக்கும் என்பதால் இரவு நேரம் செல்வேன். ஓசியில் புத்தகம் படிக்க எனக்கு மனமில்லை. ஆகவே, கடையில் உள்ள சில்லறை வேலைகளை செய்துவிட்டு, நடுநாசியில் தினசரி, வார இதழ் என்று அத்தனையும் படித்து முடிக்கும் போது... பொழுது விடிந்து இருக்கும். இப்படியாக புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்த நான் எங்கள் தோட்டத்திற்கு எப்போதாவது செல்வதும் உண்டு. அப்படி ஒரு முறை சென்ற போது, என் தந்தை, ஒரு புதிய மனிதருடன், எங்கள் பெரியப்பா மகன் ராமமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு வந்தார். பக்கத்தில் இருந்தவர்களிடம் என்ன விஷயம்? என்று கேட்டேன். ‘‘ஏதோ உரம் போடாம, மருந்து தெளிக்காம விவசாயத்தை சொல்லிக் கொடுக்க போறாங்களாம்...’’ என்று சொன்ன போது எனக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்தது. சத்தம் போட்டு சிரித்தால் உள்நாட்டு கலவரம் வந்தவிடும் என்று அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டேன். இந்த சம்பவம் நடந்து, மூன்று மாதம் கழித்து, தோட்டத்தில் நானும் தாத்தாவு மட்டும் இருந்தோம். அப்போது அன்று வந்த அதே புதிய மனிதர் வந்தார். தாத்தாவிடம் நன்றாக பழக்கமாகி இருந்தார்.


இதற்கு காரணம், தாத்தா பல ஆண்டுகளுக்கு முன்பே மேழிச்செல்வம் என்ற விவசாய இதழுக்கு சந்தா கட்டி படித்தவர். ‘‘திருச்சியில் நம்மாழ்வார் அண்ணாச்சினு ஒருத்தர் இருக்காரு. அவர்தான் எங்களுக்கு குரு மாதிரி. அவரு விவசாயிகளுக்கு கிட்ட கத்துக்கிட்ட தொழில்நுட்பத்தை இந்த புத்தகத்திலு எழுதியிருக்காரு’’ என்று தாத்தாவிடம் கொடுத்தார். இந்த சம்பவம் 1997&ம் ஆண்டு வாக்கில் நடந்தது. நம்மாழ்வார் என்ற பெயரை அப்போதுதான் முதல் முறையாக காதில் கேட்டேன். இவர்தான் என் வாழ்க்கையை புரட்டிப் போட போகிறார் என்று அப்போது தெரியாது.
திருச்சியில் இருந்து லீசாநெட்வோர்க் மூலம் வெளிந்த ‘பசுந்தளிர்’ என்ற அந்த இதழை படிக்கும் போது சில தகவல்கள் ஆச்சர்யமாக இருந்தது. இருந்த போதும், அதில் இருந்த விஷயங்கள் எனக்கு அப்போது பிடிபடவில்லை. பிறகு ஒரு நாள் ‘‘யாரு தாத்தா இந்த ஆளு?’’ என்று கேட்டேன். ஆத்தூரில் செங்கிஸ்கான் என்பவர் ‘அவார்டு’ தொண்டுநிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் எங்கள் குடும்ப நண்பர். தொண்டுநிறுவனம் மூலம் இயற்கை விவசாயத்தை பரப்பும் பணியை செய்து வந்தார். அவரது ஊழியர்தான் இந்த நபர், பெயர் செல்லமுத்து. இவர்தான் இந்த பகுதியில் இயற்கை விவசாய களப்பணியாளர் என்று தெரிந்து கொண்டேன். நூலகம் சென்ற நேரம் போக தோட்டத்தில்தான் இருப்பேன். அந்த நேரங்களில் செல்லமுத்து அண்ணன் அங்கு வருவது உண்டு. ஆரம்பத்தில் இயற்கை விவசாயம் குறித்து கடுமையான எதிர்ப்புகளை காட்ட வைத்தது என் புத்தக அறிவு. ஆனால், தாத்தா ஒரு காலத்தில் எந்த உரமும் போடாமல்தான் விவசாயம் செய்து வந்த அனுபவத்தை சொன்ன போது, கொஞ்சம், கொஞ்சமாக அது குறித்து தெரிந்து கொள்ள தொடங்கினேன். ஒற்றை வைக்கோல் புரட்சி செய்த மசானோ ஃபுக்கோவோகா, கியூபா இயற்கை விவசாயம், பசுமை புரட்சியின் வன்முறைகள்... என்று தேடித்தேடிப் படித்தேன். ஒருக்கட்டத்தில் படித்தை எல்லாம் வயலில் செய்துபார்க்கவும் தொடங்கினேன். இப்படி இயற்கை விவசாயம் செய்து வந்த போது, திருச்சி லீசாநெட்வோர்க் மூலம் இயற்கை விவசாயம் குறித்த பாடம் நடத்துவதை அறிந்து படித்து வந்தேன். அது 1998 ம் ஆண்டு என்று நினைக்கிறேன் ‘‘தருமபுரியில் நடக்கும் விழாவுக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி, நம்மாழ்வார் அண்ணாச்சி வருகிறார்’’ என்று செல்லமுத்து அண்ணன் சொன்னார்.
துள்ளிக் குதித்தேன். அவரை காண்பதற்காக ஆயிரம் கேள்விகளுடன் சென்றேன். ஆனால், அந்த விழாவில் அவர் பேசியதை கேட்டவுடன் அவை அனைத்தும் காணமல் போயின. அவரது எளிமையும், பழகும் தன்மையும், மனிதநேயமும்... எல்லோரையும் கவர்ந்திழுத்தது. அங்கு நடந்த காட்சியை பார்த்தவுடன், எனக்கு சாக்ரடீஸ் குறித்து பிளாட்டோ எழுதிய வரிகள்தான் நினைவுக்கு வந்தது. ‘‘அவரை நாங்கள் எல்லாம் குருவாக மதித்து பழகினோம். அவரோ எங்களை சக நண்பர்களாக நடத்தினார்.’’

1 கருத்து:

உழவு சொன்னது…

அண்ணன் வணக்கம்,உங்கள் கட்டுரை சிறப்பாக இருக்கிறது.'சத்தம் போட்டு சிரித்தால் உள்நாட்டு கலவரம் வந்தவிடும்' என்ற வாக்கிய அமைப்பு சிறப்பாக இருக்கிறது.